Tamilசெய்திகள்

அரசியல் பேதங்கள் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒன்றுபட்டு செயல்படுவோம் – பிரதமர் மோடி

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க கூட்டணி ஆளும் 22 மாநிலங்களின் முதலமைச்சர்கள், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். அதன்பின் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “கோடான கோடி நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன். நீண்ட கால பிரதமராக இருப்பேன் என கற்பனை கூட செய்ததில்லை. இந்த பயணத்தில் பங்கெடுத்த அனைத்து சக ஊழியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பயணத்தை நான் எனது தனிப்பட்ட சாதனையாகக் கருதவில்லை, எல்லா வகையிலும், இது நமது கூட்டு சாதனை. ஒவ்வொரு என்.டி.ஏ கூட்டணிக் கட்சியின் பகிரப்பட்ட வெற்றி. எனவே இந்தத் தீர்மானத்தை உங்கள் அனைவருக்கும், பா.ஜ.க தொண்டர்கள் உட்பட நமது என்.டி.ஏ குடும்பத்தின் ஒவ்வொரு தொண்டருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

இந்த அரசு மேற்கொள்ளும் சீர்த்திருத்தங்களை மக்கள் அங்கீகரிக்கின்றனர். யுபிஐ பயன்பாடு, கொரோனா காலத்தை எதிர்கொள்வதில் அரசின் முயற்சிகளுக்கு மக்கள் சிறந்த வகையில் கை கொடுத்தனர். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். அரசியல் பேதங்கள் கடந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒன்றுபட்டு செயல்படுவோம்.

நாட்டின் வளர்ச்சிக்காக உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை கோருகிறேன்.” என்று தெரிவித்தார்.