Tamilசெய்திகள்

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விமர்சித்த நடிகர் மன்சூர் அலிகான்

ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.

பெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.

தி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்? என கேள்வி எழுப்புகிறேன்.

பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.

இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *