Tamilசெய்திகள்

வெங்காயம் தட்டுப்பாடு அதிகரிப்பு! – நாசிக்கில் இருந்து வரும் 800 மெட்ரிக் டன் வெங்காயம்

இந்தியா முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவு வெங்காயம் கிடைக்கவும், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

2025-26-ம் ஆண்டிற்கான வெங்காயத்தின் உற்பத்தி 307 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு(எல்எம்டி) அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ள நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், வரும் மாதங்களில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதற்காக 2026-27-ம் ஆண்டில் விலை நிலைப்படுத்துதல் நிதி (பிஎஸ்எஃப்) இடையகத்திற்காக இரண்டு லட்சம் மெட்ரிக் டன் ரபி வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

கடந்த மே 15-ம் தேதி கொள்முதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு, இடையகத்திற்காக சுமார் 1.21 எல்எம்டி வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம் மற்றும் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் சம்மேளனம்ஆகியவற்றின் நடமாடும் வேன்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும், சஃபால் மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் வெங்காயம் கிலோவிற்கு 35 ரூபாய்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்காக காந்தா எக்ஸ்பிரஸ் மூலம் நாசிக்கில் இருந்து புறப்பட்டு, இன்று மாலை அல்லது நாளை காலை சுமார் 800 மெட்ரிக் டன் வெங்காயத்துடன் டெல்லி என்சிஆர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ள மற்ற முக்கிய நுகர்வு மையங்களுக்கு சாலை போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.