Tamilசினிமா

ராஜமவுலியின் புதிய படம்! – சிரஞ்சீவி தொடங்கி வைத்தார்

‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி என்ன படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

தற்போது தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.

ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவதால், இந்தப் படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறது.

இதற்காக நடைபெற்ற நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து பூஜையைத் தொடங்கி வைத்தார். மேலும், ‘பாகுபலி’ நாயகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா இந்த விழாவில் கலந்து கொண்டனர். இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *