செய்தியாளர்களை பார்த்ததும் திருடனை போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்
தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
குறுவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது. ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் கிடக்கின்றது. நிர்வாக திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது. ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை.
ஆட்சி அமைந்து 3 மாதங்களாகியும் முதல்வர் வாயில் இருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை. மகாராஷ்டிரா நாக்பூரில் ரெயிலில் இருந்து விவசாயிகள் பாதியில் இறக்கிவிடப்பட்டது குறித்து முதல்வர் வாய் திறக்காதது ஏன்? மத்திய அரசை பகைத்தால் பிரச்சனை வரும் என்பதால் பாஜக என்ற பெயரை உச்சரிக்காத அளவு தைரியசாலி தவெக.
கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய். அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப்போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என முதல்வருக்கு கூறினோம். முதலமைச்சரை பார்க்க சென்ற விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்தது தமிழக அரசு. கர்நாடக முதல்வரை பார்க்க நினைக்கும் முதலமைச்சர் விஜய் தமிழக விவசாயிகளை அழைத்து பார்க்காதது ஏன்?. செய்தியாளர்களை பார்த்ததும் திருடனை போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர்.
பள்ளிகள் மட்டுமல்ல கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டிருக்கின்றனர். ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை. வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்து சென்று பூஜை போடுகிறார் வேளாண் அமைச்சர். அமைச்சர்கள் மட்டும் அல்ல அவர்களின் சொந்தக்காரர்களும் ஆய்வுக்கு செல்கின்ற அளவுக்கு ரீல்ஸ் மோகம் முத்தி உள்ளது.
மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் தொடங்கி உள்ளது திமுக. திருட்டு லாட்டரி விற்றவர், திருட்டு விசிடி விற்றவர், பிளாக்கில் டிக்கெட் விற்றவர் என மொத்த கேபினட்டும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது.
5 ஆண்டுகளாக காவிரியில் முறையாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தினமும் மக்களை திசைதிருப்பும் வேலையை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். தினமும் 4 மணிக்கு ஒரு ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் வேலையை செய்கிறார் முதலமைச்சர். திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
* அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா விவசாயியா பொறக்கனும் என பேசிய முதல்வர் ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே பண்ணலாமே. தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிக பாதிப்புக்கு உள்ளானது விவசாயிகள் தான். நீர் இல்லாததால் குறுவை சாகுபடியில்லாமல் 14 லட்சம் விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
* காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது அவமானம் என நினைக்கிறார் முதல்வர் விஜய். ஊரான் வீட்டு நெய்யில் இன்று அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்கிறார் முதல்வர். கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக விவசாய பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டும். ஆக.5 பட்ஜெட் கூட்டத்தில் சும்மா விட மாட்டோம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என எங்கும் குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
