Tamilவிளையாட்டு

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானம் – விராட் கோலி விளக்கம்

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 235 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். பிரபலங்களின் கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட நிறுவனங்கள் விரும்புகின்றன.

இதற்காக அவர்களுக்கு நிறுவனங்கள் கட்டணம் வழங்குகின்றன. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை இங்கிலாந்தின் ஹாப்பர் எச்.கியூ. நிறுவனம் வெளியிட்டது.

முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ. 26.78 கோடி பெறுகிறார். அவரை 60 கோடி பயனர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ.21.15 கோடி) உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார். அவர் மொத்த பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளார். விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியை 25.60 கோடி பேர் பின் தொடருகிறார்கள். பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.9.45 கோடி) ஒட்டுமொத்த பட்டியலில் 19-வது இடத்திலும், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார். முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியாஸ் அலி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு ரூ.4.4 கோடி வருமானம் ஈட்டி 29-வது இடத்தில் உள்ளார். இந்த தகவலை பார்த்து, விராட் கோலி இவ்வளவு தொகை பெறுகிறாரா…! என ரசிகர்கள் வாயடைத்து போனர். ஆனால், இந்த தகவல் குறித்து விராட் கோலி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”நான் பெறும் அனைத்திற்கும் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டுள்ளவனாகவும் இருக்கும் போது, சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் பெறும் வருமானம் குறித்து பரவி வரும் செய்தி உண்மையல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது உண்மை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.