Tamilசினிமா

ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார் – இயக்குநர் அமீர் பாராட்டு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் திராவிட கருத்துகளாக இருக்கட்டும், பெரியார் கருத்துகளாக இருக்கட்டும் திரைப்படங்கள் மூலமாக தான் இருந்தது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது.

மாரி செல்வராஜ் மத மோதல்களை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரைப்படம் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு தெரிந்து இந்த கருத்துகள் மோதல்களை ஏற்படுத்தும் கருத்தாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.