Tamilசினிமா

கணவரை பிரியும் பாலிவுட் நடிகை ஈஷா

1970-80களில் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், பிரபல நடிகை ஹேமமாலினி (Hema Malini). தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமமாலினி, பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஹேமமாலினியின் கணவர், 70களில் இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த தர்மேந்திரா (Dharmendra).

தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினருக்கு ஈஷா தியோல் (Esha Deol) மற்றும் அஹானா தியோல் என 2 மகள்கள் உள்ளனர். தற்போது 42-வயதாகும் ஈஷா தியோல், தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2012 ஜூன் மாதம், ஈஷா, பாரத் தக்தானி (Bharat Takhtani) எனும் தொழிலதிபரை மணந்தார். 2017ல் இத்தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது; 2019ல் 2-வது குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ஈஷா-பாரத் தம்பதியினர் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமான சூழலில் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம். முக்கியமான இந்த மாற்றத்தின் போது எங்கள் இரு குழந்தைகளின் நலனும் எங்களுக்கு அவசியம். இந்நிலையில், எங்கள் வாழ்க்கை தொடர்பாக நாங்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவை பிறர் மதிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிந்தி குடும்பத்தை சேர்ந்த, பட்டதாரியான பாரத் தக்தானி, தங்க ஆபரண துறையில் தனது தந்தையின் வியாபாரத்தை நிர்வகித்து வந்தார். 2021 ஆண்டில் இவரது நிகர மதிப்பு $20 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது.

ஈஷாவும், பாரத்தும் பள்ளிப்பருவ காலகட்டம் தொடங்கி ஒருவரையொருவர் விரும்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தாலும், ஒரு பள்ளி நிகழ்ச்சியின் சந்திப்பில் இருந்து ஒருவரையொருவர் விரும்ப தொடங்கியதாக ஈஷா குறிப்பிட்டிருந்தார்.