Tamilசெய்திகள்

கரூர் மணல் குவாரியில் மணல் எடுக்கப்பட்ட விவரங்களை பெற செயற்கைகோள் மூலம் ஆய்வு

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆதியோர் ஓப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த 2 குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என 3 குவாரிகளில் 2 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி மீண்டும் 2-வது முறையாக மணல் திடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.

பின்னர் 3-வது முறையாக 18-ந்தேதியும், 4-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, ஜிட்டல் சர்வே எந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர். இந்த பல்வேறு கட்ட சோதனைகளில் போலி ரசீதுகள், போலி கியூ ஆர் குறியீடுகள் உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் கம்ப்யூட்டர்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள், ஹார்டு டிஸ்க் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே இந்த குவாரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல், விற்கப்பட்ட மணல் போன்ற விவரங்களை செயற்கைகோள் உதவியுடன் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ, கான்பூர் ஐ.ஐ.டி. உதவியுடன் செயற்கைகோள் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இவை மணல் அள்ளப்பட்டது அளவீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.