Tamilவிளையாட்டு

சி.எஸ்.கே அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் – ரசிகர்கள் அதிர்ச்சி

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 40.2 ஓவரில் 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தபிசுர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.