Tamilசெய்திகள்

சீன விசா பெறுவதற்கான பண மோசடி வழக்கு – எம்.பி கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.பி.எல். நிறுவனம் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும். ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.