Tamilசினிமா

சென்னை போயஸ் கார்டனில் புது வீடு வாங்கிய நயன்தாரா

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.