Tamilசெய்திகள்

டெல்லியில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு பிப்ரவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.