Tamilசெய்திகள்

தமிழகத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளில் சோதனை – 100 பேர் கைது

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையில் ஈடுபட்டது.

இதில், தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் மற்றும் ரூ.8.31 லட்சத்திற்கும் அதிகமான பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் பராக்கத்துல்லா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சேதனை நடத்தியுள்ளனர்.

மேலும், மதுரை மாவட்டத்தில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவகங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. இதில், நெல்பேட்டையில் பிஎஃப்ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் யூசுப் வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதைத்தவிர, கோரிப்பாளையம், நெல்பேட்டை, வில்லாபுரம், யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கோவையில் பிஎஃப்ஐ நிர்வாகிகள், அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பிஎஃப்ஐ செயற்குழு உறுப்பினர் இஸ்மாயிலை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மதரஸாவிலும் போலீஸ் உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல், தென்காசி, தேனி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ இடங்களிலும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், என்ஐஏவின் சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஃப்ஐ நிர்வாகிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.