Tamilசெய்திகள்

தமிழகர்களின் வேலைவாய்ப்பினை வடமாநிலத்தவர் பறிப்பதை வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணி தேவைக்காக சிறப்பு ரயில் மூலம் 800 இளம் பெண்களை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அழைத்து வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை மூலதனமாக கொண்டு, தமிழக அரசின் தயவில், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வேலைக்கு மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினை தட்டிப்பறிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி மொழி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்க்கும் வீரமிகுந்த தமிழ் மண், திட்டமிட்டு குடியேற்றப்படும் இந்தி மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறுவது வரலாற்று பெருந்துயராகும். ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் வடநாட்டவர்கள் குடியேறி தமிழர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் நிலையில், அதனை தடுக்கத் தவறி வேடிக்கை பார்ப்பதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

ஆகவே, தமிழக அரசு, ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போல தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீதம் வேலையினை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே ஒதுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

இனியாவது, தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரை கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவர்கள் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.