Tamilசெய்திகள்

தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 37 தொகுதிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 569 தி.மு.க. வாக்குசாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் நேரடியாக பங்கேற்காமல், காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

திடீரென்று காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக நான் முதலில் என்னுடைய வருத்தத்தை மிகுந்த பணிவோடு உங்களுக்கெல்லாம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அங்கு வரவில்லை என்று சொன்னாலும் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? எப்படி சென்று கொண்டிருக்கிறது? என்றுதான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது. தொடர்ந்து விசாரித்துக்கொண்டிருந்தேன். அதனால் நீங்கள் யாரும் என்னை தவறாக நினைத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன்.

அதிகம் பேசக்கூடாது என்று டாக்டர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சை சுருக்கமாக உதயநிதி ஸ்டாலின் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் உரையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து படித்தார். அந்த உரையின் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டுக்காக எந்த சிறப்பு திட்டத்தையும் கொண்டுவராமல் தமிழ்நாட்டை மத்திய பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது. பா.ஜனதாவின் இந்த துரோகத்தையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். பா.ஜனதாவின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது அ.தி.மு.க.

இன்றைக்கு பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் பா.ஜனதாவின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜனதா. அதனால்தான், வருமானவரித்துறை சோதனை எல்லாம் நடைபெறுகிறது. சோதனைகள் மூலமாக அ.தி.மு.க.வை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியதுபோல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும், அச்சறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல தி.மு.க.

75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்; அந்த வெற்றி என்றைக்கும் தொடரும். வருமான வரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்கு தெரிகிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை. ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாக சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் வேலுவை சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் சோதனைகளில், வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு சதவீதம்கூட இல்லை.

வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான, பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும். அதனால்தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிகமிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்த தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும். கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அ.தி.மு.க.வும், தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பா.ஜனதாவும், சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணைப்போகும் அதன் கூட்டணி கட்சிகளும், வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி, மறைமுக கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு ‘டெபாசிட்’ கூட கிடைக்கக்கூடாது.

இது, கலைஞரின் தொண்டர்களான உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். கட்சி தொண்டர்களாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தாக வேண்டும். வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும். அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையை, உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘பா.ஜனதா இல்லாத மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்குகிறது என்றும், மோடிக்கும், ‘இ.டி.’க்கும் பயப்பட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன், சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், மாவட்ட வர்த்தக அணி பிரிவு அமைப்பாளர் நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.