Tamilசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரா உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

2-வது நாளான இன்று காலை பவித்திர மாலைகளுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பவித்திர மாலைகள் மூலவர் மற்றும் உற்சவருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. நாளை யாகசாலை பூஜையுடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை இன்று ஏழுமலையான் கோவிலில் ரத்து செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று 79 ஆயிரத்து 152 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,329 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.