Tamilசெய்திகள்

தூத்துக்குடியில் இன்று மாலை பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை

மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கு பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து மெயின்ரோடு, பூங்கா கிழக்கு சாலை, சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் சாலை, எட்டயபுரம் சாலை, புதுரோடு, மெயின்ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் முன்பு நிறைவடைகிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார். மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி விலக்கில் இருந்து தொடங்கி, புதியம்புத்தூரில் நிறைவடைகிறது.

வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு பாத யாத்திரை தொடங்குகிறது. குரூஸ் பர்னாந்து சிலை, சத்திரம் பஸ் நிறுத்தம், வி.ஜி.எஸ். பள்ளி, சிவன் கோவில் ரதவீதி, வி.இ.ரோடு, சந்தை ரோடு, கான்வென்ட் ரோடு, சண்முகபுரம் வழியாக சுமங்கலி திருமண மண்டபம் அருகே உள்ள கன்னிவிநாயகர் கோவில் சந்திப்பு வரை நடக்கிறது.

மாலை 4 மணிக்கு ஆழ்வார்திருநகரி சித்திரை வீதி, ஆதிநாதபுரம், நவலட்சுமிபுரம், சமத்துவபுரம், புதுக்குடி, ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு வரை பாத யாத்திரை நடக்க இருப்பதாக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.