Tamilசினிமா

நயன்தாரா, திரிஷா ஆடினால் பார்க்கும் மக்கள் இவர்கள் ஆடினால் பார்க்க மாட்டார்களா? – நடிகர் ராகவா லாரன்ஸ் கேள்வி

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ். திரையுலகில் நடிகர் ஹீரோ என்பதை கடந்து, நிஜ வாழ்வில் பலருக்கு உதவி செய்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய “மல்லர் கம்பம்” சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது.

தற்போது ராகவா லாரன்ஸ்-இன் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற “மல்லர் கம்பம்” சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், “எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்சில் இவர்களை ஆட வைப்பேன்.”

“நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள்.”

“இது வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா? எனக் கேட்டேன். ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள். இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும்.”

“இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன்.”

“இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்த கலை இவர்களை வாழ வைக்கும். இந்த கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன். அந்த படத்தின் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன்,” என்று தெரிவித்தார்.