Tamilசெய்திகள்

நாளை, நாளை மறுநாள் சென்னையில் இருந்து பல்வேரு ஊர்களுக்கு 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

கோடை விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. நாளை, நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 1,130 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்களில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். வெளியூர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.