Tamilவிளையாட்டு

பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலாக மாறிவிட்டது – இந்தியா, இலங்கை, நியூசிலாந்தை எச்சரித்த மேத்யூ ஹெய்டன்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. ஆனால் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. மேலும், இந்தியா தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய மங்கியது என்றே சொல்லாம். ஆனால், அதன்பின் வீறுகொண்டு எழுந்த பாகிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றது. நெதர்லாந்து தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.

அந்த அணியின் மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் இப்திகார், ஹாரிஸ், சதாப் ஃபார்முக்கு வந்துள்ளனர். ஏற்கனவே தொடக்க வீரர் ரிஸ்வான், பாபர் ஆசம், பந்து வீச்சாளர்கள் நல்ல நிலையில் உள்ளதால் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) சிட்னியில் நடைபெற இருக்கும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலாக மாறிவிட்டது என மூன்று அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹெய்டன் கூறுகையில் ”முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றபின், இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிடுவோம் என்ற சாத்தியக்கூறான யோசனைகள் இருந்தன. ஆனால், அந்த நிலையில் பாகிஸ்தான் வீறுகொண்டு சூப்பர் ஃபார்முக்கு திரும்பிய தருணம், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.

இந்த போட்டியில் உலகின் எந்தவொரு அணியும் தற்போதைய நிலையில், எங்களை எதிர்கொள்ள விரும்பமாட்டார்கள். மற்ற அணிகள் எங்களை வெளியேற்றிய நினைத்தார்கள். தற்போது அவர்கள் எங்களை தோற்கடிக்கப் போவதில்லை. நெதர்லாந்து அணி இல்லையென்றால், ஒருவேளை நாங்கள் இங்கே இல்லாமல் இருந்திருக்கலாம். தற்போது நாங்கள் இங்கே இருக்கிறோம். இது மிகவும் பவர்ஃபுல் ஆனது. ஏனென்றால், நாங்கள் இங்கே இருப்பதை (அரையிறுதி) யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள். இதை நாங்கள் சாதகமாக பெற்றுள்ளோம்” என்றார்.