Tamilசெய்திகள்

பா.ஜ.கவை முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு – ஆ.ராசா எம்.பி பேச்சு

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.