Tamilசெய்திகள்

பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி்ல் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையே இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.