Tamilசெய்திகள்

மத்தியபிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப் பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து. சத்தீஸ்கர் மாநிலத்துக்கான முதல் கட்ட தேர்தலும் 7-ம் தேதி நடைபெற்றது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்துக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் சார்பில் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.