Tamilசெய்திகள்

மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி தேடித்தருவார்கள் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மேற்கு வங்காள மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரியில் நேற்று பா.ஜ.க. அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியையும் கடுமையாக சாடினார். அவர் பேசியபோது கூறியதாவது:-

நாட்டில் மீண்டும் மோடி பிரதமர் ஆவதை உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்காள மாநில மக்கள் எங்களுக்கு 35-க்கும் அதிகமான இடங்களில் (மொத்த இடங்கள் 42) வெற்றி தேடித்தருவார்கள்.

சட்ட விரோத குடியேற்றங்களை, பசுக்கள் கடத்தப்படுவதை, ஊழலை பா.ஜ.க.வால் மட்டுமே தடுக்க முடியும். தீதி-பாட்டிஜா (மம்தா மற்றும் அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி) குற்றங்களை அகற்ற ஒரே வழி பா.ஜ.க.தான். பயங்கரவாதத்தில் இருந்து இந்த மாநிலத்தை விடுவிக்க ஒரே வழி பா.ஜ.க. 2024 தேர்தலில் எங்களுக்கு 35 இடங்களைத் தாருங்கள். 2025-ம் ஆண்டு வரை காத்திருக்கத் தேவையில்லை. 2025-க்கு முன்னதாகவே மம்தா பானர்ஜியின் அரசு வீழ்ந்து விடும்.

மம்தா பானர்ஜி அரசின் சமரச கொள்கைகளால்தான் ராமநவமியின் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வரும். ராமநவமி பேரணிகளை தாக்கும் தைரியம் யாருக்கும் வராமல் போகும். மாநிலத்தின் இளைஞர்கள் பற்றி மம்தாவுக்கு கவலை இல்லை. அவரது ஒரே குறி, தனது சகோதரர் மகனை மேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆக்குவதுதான். மத்திய அரசு திட்டங்களில் மம்தா தனது படத்தை ஒட்டுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.