Tamilசெய்திகள்

ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது – அண்ணாமலை பேச்சு

தொடர் மழை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகுவதற்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். இப்போது, 3-வது முறையாக மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி. அனைத்து கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். தனது வருங்கால சந்ததியினர் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர். மக்களின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்.

ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர். ஆனால், ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ராமர் வழிபட்டுள்ளார்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.