Tamilசினிமா

‘லியோ’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று (அக்டோபர் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்தை சட்டவிரோதமாக 1200-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு மற்றும் தனியார் இணையதள சேவைக்கு உத்தரவிட வேண்டும் என்று ‘லியோ’ பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘லியோ’ திரைப்படம் 1200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதோடு கலைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து ‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி அவ்வாறு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.