Tamilசெய்திகள்

வதந்திகளை நம்ப வேண்டாம் – விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும், பொதுச் செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவமனையில், விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.”

“செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்,” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.