திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுவது பிரகாசமாக தெரிகிறது – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.வில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மக்களோடு செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் முடிவை பின்பற்றி தே.மு.தி.க. அ.தி.மு.க. பக்கம் தான் வருவார்கள். தான் இருக்கும் வரை தி.மு.க.வை எதிர்த்தவர் விஜயகாந்த். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது. தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.
தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும். அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடியார் இறங்குவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
