Tamilசெய்திகள்

2 மாதத்தில் வைகை அணை தூர்வாரும் பணி நடைபெறும் – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ளது. போதுமான மழை இல்லாத காரணத்தாலும், குடிநீர், பாசனநீருக்கு திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 20அடியாக நீர்மட்டம் சரிந்தது. ஏற்கெனவே, 15 அடிக்கும் மேல் வண்டல் மண்படிவு உள்ளது. இதனால் நீர்மட்டம் 5அடிக்கும் கீழ் சென்றது. இதனால் வண்டல் மண் படிமங்கள் வெளியே தெரியத் தொடங்கின.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அணைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் வலியுறுத்தனர். இதனையடுத்து தேனி மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 13) ஆய்வுக்கு வந்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வைகை அணைப் பகுதியை ஆய்வு செய்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” வைகை அணையில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அணையில் தூர்வாரும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ள ஏறத்தாழ 9ஆண்டுகளாகும். இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வைகை அணையை தூர்வாரும் பணி நடைபெறும்.

அத்துடன் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் வணிக ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வண்டல் மண்ணைக் கடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.