Tamilசெய்திகள்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு! – பொதுமக்களில் ஒருவர் பாதிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்புச் சாவடிக்கு அருகே நேற்று (மே 23) மாலை நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வாஷிங்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுடத் தொடங்கியதை அடுத்து, அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் படை (Secret Service) அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் அந்தச் சந்தேக நபர் சுடப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியேயுள்ள 17-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்புப் பகுதியில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது, அங்கிருந்த பொதுமக்களில் ஒருவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்த நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்தபோதிலும், அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ (FBI) இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், தங்களின் அதிகாரிகள் உடனடியாகத் தளத்திற்கு விரைந்து துப்பாக்கிச் சூடு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் பொதுமக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.