Tamilசெய்திகள்

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன், அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *