பிரதமர் மோடியின் வருகையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள்!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோவில் வருகை தர உள்ளார். இதையொட்டி, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழித்தட மாற்றங்கள் 15.04.2026 அன்று மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அமலில் இருக்கும். எனவே, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்பவர்கள் தங்களது பயண முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாற்றப்பட்ட வழித்தடங்கள்:
வெளிமாவட்ட வாகனங்கள்: பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், WCC, கிருஷ்ணன்கோவில், வடசேரி ஆகிய பகுதிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, அப்டா (APTA) வழியாக நான்கு வழிச்சாலையை அடைய வேண்டும்.
கன்னியாகுமரி/கூடங்குளம் செல்லும் வாகனங்கள்: கோட்டார், செட்டிகுளம், பார்வதிபுரம் பகுதியிலிருந்து கன்னியாகுமரி செல்பவர்கள் டெரிக் சந்திப்பு, அனந்தன்பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம், தொல்லவிளை, வேதநகர், பறக்கை வழியாகச் செல்ல வேண்டும். அல்லது பட்டகசாலியன்விளை, இருளப்பபுரம், நாயுடு மருத்துவமனை வழியாகச் செல்லலாம்.
திருநெல்வேலி செல்லும் வாகனங்கள்: திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலை ஆகிய இடங்களிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு, அப்டா வழியாக நான்கு வழிச்சாலையில் செல்ல வேண்டும்.
சுற்றுலா வாகனங்கள்: நாகர்கோவில் வழியாகக் கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், அப்டா மார்க்கெட் சந்திப்பு, தேரேக்கால்புதூர், புதுக்கிராமம், தேரூர், சுசீந்திரம் வழியாகச் செல்லலாம்.
ரயில் நிலையப் பயணிகள்: நாகர்கோவிலிலிருந்து கோட்டார் ரயில் நிலையம் செல்பவர்கள் பார்வதிபுரம், பெருவிளை, ஆசாரிப்பள்ளம், அனந்தன்பாலம், கோணம் ஆத்துப்பாலம், இளங்கடை, நாயுடு மருத்துவமனை வழியாக ரயில்வே ரோட்டை அடையலாம்.
பேருந்து நிலைய மாற்றங்கள்:
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராஜாக்கமங்கலம், குளச்சல், திங்கள் நகர், தக்கலை, மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அன்று வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம், மணக்குடி செல்லும் பேருந்துகள் கோட்டார் ரயில் நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
வாகனங்கள் நிறுத்தத் தடை:
பாதுகாப்பு கருதி கீழ்க்கண்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
பொன்னப்பநாடார் காலனி – கார்மல் நகர் – செட்டிக்குளம் சாலை.
செட்டிக்குளம் – வேப்பமூடு – வடசேரி சாலை.
வடசேரி – ஒழுகினசேரி – கோட்டார் காவல் நிலையம் சாலை.
கோட்டார் காவல் நிலையம் – சேவியர் சந்திப்பு – செட்டிக்குளம் சந்திப்பு.
போக்குவரத்து மாற்றத்திற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
