Tamilவிளையாட்டு

ஐபிஎல் 2020-யில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரிப்பு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. மார்ச்-மே மாதங்களில் நடைபெற இருந்த இந்த போட்டி செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது.

சமீபத்தில் முடிந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ரசிகர்கள் டெலிவி‌ஷன், டிஜிட்டல் மூலம் இந்த போட்டியை வெகுவாக ரசித்தார்கள்.

கொரோனா பாதிப்புக்கு இடையே ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. டெலிவி‌ஷன் மற்றும் டிஜிட்டல் மூலம் பார்வையாளர்களில் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஐ.பி.எல். போட்டியை 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிசேஸ் பட்டேல் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி எப்போதுமே உலக தரம் வாய்ந்தது. இதனால் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.