Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை குறைகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96.44 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 96,44,222 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,182 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,00,792 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 41,970 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,03,248 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 94.37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 14,69,86,575 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,01,063 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.