தமிழகத்தில் 16 ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைத் தவிர்த்து, இதர தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மழை முன்னறிவிப்பு விபரம்:
• ஜூலை 14, 15: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
• ஜூலை 16 முதல் 19 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், இதர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 14 காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரக் கணக்கீட்டின்படி தமிழகத்தில் எங்கும் மழைப் பதிவு பதிவாகவில்லை.
கடலோரப் பகுதி நிலவரம்: தமிழகக் கடலோரப் பகுதிகளில் ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை மீனவர்களுக்கான பிரத்தியேக எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
