Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இரு மாதத்துக்கு பின் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, புதிய கல்வியாண்டு தொடங்கியதால் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் 6-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர் தங்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

ஆனாலும், சில மணி நேரத்தில் தலிபான்கள் தங்கள் முடிவை மாற்றினர். பள்ளிகளில் 6-ம் வகுப்புக்கு மேல் பயிலும் சிறுமியருக்கு மீண்டும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தனர். தலிபான் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தலிபான்களுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.