Tamilசெய்திகள்

ஆளுநரின் நடவடிக்கையை தனக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன் கருத்து

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் நேற்று செந்தில் பாலாஜி மீதான வழக்கை சுட்டிக்காட்டி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது:-

எந்தவொரு அரசியலமைப்பு கூறுகளை காப்பாற்ற ஆளுநர் இருக்கிறாரோ, எங்கு சட்டத்தினுடைய ஆட்சி நடைபெறுவதற்கு அரசு தடையாக இருக்கிறதோ, அப்போது இதுபோன்று நடவடிக்கை எடுக்க ஆளுநர் உள்ளாக்கப்படுகிறார்.

முதன்முதலாக செந்தில் பாலாஜி மீது அதிகமான குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பித்து வைத்தது இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இன்று செந்தில் பாலாஜி நீக்கப்பட்டிருக்கிறார் என்றால், இது அவர் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்க்க வேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழாக என்னென்னவெல்லாம் அதிகாரங்கள் சட்டத்தினுடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர, இதை அரசியலா பார்க்கக் கூடாது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.