Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் இப்ராகிம் சட்ரன் ஆட்டமிழக்காமல் 143 பந்தில் 129 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவித்தது.

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் (128 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 201*) ருத்ரதாண்டவம் ஆட ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இப்ராகிம் சட்ரனின் அற்புதமான சதம், ஆப்கானிஸ்தானை சிறந்த நிலையில் வைத்திருந்தது. அவர்கள் 2-வது பாதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை தொடங்கி, 70-வது ஓவர் வரை சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். ஆனால், கடைசி 25 ஓவர்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம், அவர்களின் அதிர்ஷ்டம் மாறுவதற்கு போதுமானதாக இருந்தது.

மேக்ஸ் நெருக்கடியில் இருந்து மேக்ஸ் அதிரடி! எனது வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் ஆட்டம் (மேக்ஸ்வெல் இரட்டை சதம்).

இவ்வாறு தெரிவித்துள்ளார்.