Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் தனது 30-வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு நாள் போட்டியில் 3 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதனையடுத்து சுப்மன் கில்லும் 72 பந்துகளில் சதத்தை சுவைத்தார். தனது 21-வது ஒரு நாள் போட்டியில் ஆடும் அவருக்கு இது 4-வது சதமாகும். ஒரு நாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் காண்பது இது 10-வது நிகழ்வாகும். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதையும், சுப்மன் கில் (3 ஆட்டத்தில் 360 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா 101 ரன்கள் எடுத்து தனது 30-வது சதத்தை பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (46) ஆகியோருக்கு அடுத்துள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்குடன் (30 சதம்) 3-வது இடத்தை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா (28 சதம்) இருக்கிறார்.