Tamilசெய்திகள்

கர்நாடக முதலமைச்சரை தொடர்ந்து இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்

கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் இன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகிறார். அவருடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். பினராயி விஜயன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று தெரிவித்திருந்தார். இதனால் திமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்துகிறார்கள்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் “நாங்கள் எங்களுடைய உரிமையை கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய பங்கீட்டை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து வறட்சிக்கான நிவாரண தொகையை கர்நாடக அரசு கேட்டது. ஆனால் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை” என்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிறகு மத்திய அரசு- தென்மாநிலங்களுக்கு இடையில் வரிப் பகிர்வு தொடர்பான பிரச்சினை வெடித்துள்ளது.