Tamilசெய்திகள்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற கட்சிகளால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உள்ள 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. அதனருகே தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் படகு சவாரி செய்வதற்கான படகு குழாம் உள்ளது. மேலும், அறிவியல் பூங்கா, சிறுகல் பூங்கா உள்ளிட்டவையும் உள்ளன.

இங்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.