Tamilசெய்திகள்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்திய மத்திய அரசு

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

இந்நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2-வது காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. வட்டி விகிதம், 0.10 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டு கால டெபாசிட்டுக்கான வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி 7.5 சதவீதமாகவும் நீடிக்கும். 5 ஆண்டுகால தொடர் வைப்புக்கான வட்டி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட வட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. சேமிப்பு டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.