Tamilசினிமா

மது போதையில் ரகளை செய்த ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் கைது

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் விநாயகன்.

இந்த நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மதுபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காவல் அதிகாரி தாக்கப்பட்டதால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நடிகர் விநாயகன் காவல் நிலைய உதவியை நாடினார் என்று காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சந்திரன் தெரிவித்து உள்ளார்.

நடிகர் விநாயகன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.