Tamilசினிமா

விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயர் – உயிருக்கு போராடுவதாக தகவல்

பொங்கி எழு மனோகரா படம் மூலம் அறிமுகம் ஆனவர் அருந்ததி நாயர். இவர் தமிழில் சைத்தான் கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், சென்னை கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது. இதில் அருந்ததி நாயர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து கடந்த 14-ந்தேதி நடந்துள்ளது.

அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கசியத் தொடங்கின. இந்த நிலையில் அந்த செய்தி உண்மைதான் என அவரது சகோதரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், “மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளார்.