த.வெ.க ஆட்சி அமைப்பதில் திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின் போது, த.வெ.க-வின் 108 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் சமர்ப்பித்தார். இருப்பினும், தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்பதால், போதிய பலம் இல்லாததைக் குறிப்பிட்ட ஆளுநர், முழுமையான பெரும்பான்மைப் பட்டியலை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் இன்று திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்க, மறுபுறம் தி.மு.க ஆதரவுடன் அ.தி.மு.க ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் பரவின. இரு கட்சிகளும் நேற்று நீண்ட நேரம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்துள்ள அரசியல் வட்டாரங்கள், தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லை எனக் கூறுகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
“தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க உருவெடுத்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதில் தி.மு.க எவ்வித இடையூறையும் செய்யாது. விஜய் தலைமையிலான புதிய அரசின் செயல்பாடுகளை அடுத்த ஆறு மாதங்களுக்கு நாங்கள் கவனிப்போம். தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களைத் த.வெ.க அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது; இருப்பினும் தி.மு.க வழங்கியது போல் குறைந்தபட்சம் ரூ. 1,000-மாவது வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்குவது சவாலான காரியம் என்றாலும், அதை அவர்கள் நிறைவேற்றினால் மகிழ்ச்சி. மாநிலத்தில் இப்போதைக்கு மீண்டும் ஒரு தேர்தல் வருவதையோ அல்லது அரசமைப்பு ரீதியான குழப்பங்கள் ஏற்படுவதையோ தி.மு.க விரும்பவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
