Tamilசெய்திகள்

விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் – பொன்.ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டில் எடுத்துக்காட்டாக விளங்கும் அரசாக விளங்குகிறது. மேலும் வங்கி கணக்கு தொடங்கியது. கியாஸ் இணைப்பு கொடுத்தது, கழிவறை கட்டியது, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். எதிர்கட்சிகள் செய்து வைத்துள்ள பிரச்சனையை சரி செய்வதால் அதில் தாமதம் ஆகிறது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி என்று சிலர் குறிப்படுகின்றனர். நாங்கள் ஒரு போதும் மதவாதியாக செயல்பட்டதில்லை.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற போகிறது.

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க. செய்தது பக்கா டிராமா. 1½ மணி நேரத்துக்குள் ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி காட்டியவர்கள் அவர்கள். இலங்கை தமிழர்களை கொன்றதுக்கு காங்கிரஸ் உதவியது என்று ராஜபக்சே கூறி உள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்?

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் மானம் உள்ளவர்கள் கைகோர்க்க மாட்டார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் பச்சை துரோகி தி.மு.க.தான்.

2014-ம் ஆண்டு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்தும், அவர்களின் துரோகம் கூறித்தும் ஒவ்வொரு மேடையிலும், என்னை அருகில் வைத்துக் கொண்டே பேசியவர் வைகோ. ஆனால் அவரே இப்போது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார். பிரதமரை பற்றி அவதூறாக பேசுவதற்கு எவருக்காவது யோக்கியம் இருக்கிறதா?

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *