Tamilசெய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேரம் மாற்றம் – புதிய கால அட்டவணை வெளியிட்ட தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்து இருக்கிறது. இதற்கிடையே புதிய ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரெயில்கள் உள்ளிட்டவை புதிய கால அட்டவணையில் இடம்பெறும்.

கடந்த ஏப்ரல் மாதம் கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய அட்டவணையின்படியே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், புதிய கால அட்டவணை 2026 ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை ஜனவரி 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த புதிய கால அட்டவணையில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரெயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது. இதேபோல, மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரெயில்வே விசாரணை அமைப்பு (என்.டி.இ.எஸ்.) என்ற செயலில் வெளியாகி இருக்கிறது.

புதிய கால அட்டவணையின்படி, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.

இதேபோல, எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. அதேநேரத்தில் மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.