Tamilசெய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் நெஞ்சுவலி – பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலம் வந்தார். அவர் அரசு விழாவில் பங்கேற்று விட்டு மதியம் மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.

அப்போது அவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வந்தபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உடன் சென்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் காரிமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து மகேஷின் உடல் நிலை குறித்து விசாரித்தனர். மேலும் தருமபுரி மாவட்ட தி.மு.க செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், மாநில பொறுப்பாளர் சூடபட்டி சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனே அமைச்சரை பார்ப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

பின்பு மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியது.