Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் – 2ம் நாள் முடிவில் இந்தியா 7/219 ரன்கள் சேர்ப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், 2ம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.